Tuesday, September 08, 2009

கதை சொல்லப் போறன்.. இது என் கதை - தொடர்

நான் ஒரு கதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில இருக்கிறன்... அதானால Exam, Project, Exhibition, etc etc க்கான தயார்படுத்தல்கள் எல்லாத்தையும் தூக்கி ஓரமாக வைத்து விட்டு இண்டைக்கு எப்பிடியும் கதை சொல்றது என்று முடிவெடுத்திட்டன்..

நான் பதிவெழுத வந்த கதையைச் சொல்ல வேணும் என்று கிருத்திகனும் விமலாதித்தனும் கூப்பிட்டிருக்கிறார்கள்.. நானும் கெதியா எழுதிறன் எண்டு இரண்டு பேருக்கும் சொன்னாலும் இன்னும் ஒரு கிழமைக்கு பிறகு எழுதிறதாகத் தான் யோசிச்சு வைச்சிருந்தன்..

கதைக்குள் கதை

ஏன் நான் இண்டைக்கு எப்பிடியெண்டாலும் இந்தக் கதையை சொல்றது என்று முடிவெடுத்தன் எண்ட கதையை முதலில சொல்லிப் போட்டு அங்கால போறன்..
வந்தியத்தேவன் கீத் இன் பதிவில் "கீத் எங்கள் கல்லூரிக்கே உரிய நேரம் தவறாமை போல் நீயும் உடனே என் விளையாட்டை விளையாடிவிட்டார் நன்றிகள்." என்று பின்னூட்டியிருக்கிறார்..
அதென்ன அவையின்ட கல்லூரிக்கே(என் சகோதர பாடசாலை) உரிய நேரம் தவறாமை? அப்ப நாங்கள் எல்லாம் என்ன நேரம் தவறுற ஆட்களோ? தவறித் தான் போடுறன் என்டாலும் கூட எப்பிடி இப்பிடிச் சொல்லலாம்... :)

அடுத்தது கிருத்திகன், விமலாதித்தன் என்று இரண்டு பேர் கூப்பிட்ட பிறகும் இன்னும் பின்னுக்கு நிக்கிறது அவ்வளவா சரியில்லைத் தானே...

அதோட சுபானு தன் பதிவில் நான் விருப்பி வாசித்த முதல் வலைப்பூ அந்த SKETCH என்று குறிப்பிட்டிருப்பது (இது தான் உடனடிக் காரணம்) அப்பிடியே உச்சி குளிர வைச்சு இந்த 1008 வேலைக்கிடையிலயும் facebook இல் farm ville இல் farm செய்யிற நேரத்தை மிச்சம் பிடிச்சு எப்பிடியாவது எழுதிப் போடு என்று எழுத வைச்சிட்டுது..

இனி கதை

எனக்கு எப்போதுமே எழுதுவதை விட வாசிப்பதில் தான் விருப்பம் அதிகமாக இருந்தது.. இருக்கிறது.. 2004 களில் எனக்காக ஒரு தளம் வைத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.. அந்த நேரம் geocities இன் பாவனை தான் இருந்தது.. அதில் எதை உள்ளடக்குவது என்பதில் குழப்பமாக இருந்தது.. A/L படிக்கிற காலமென்பதால் வீட்டில் இணையத்தில் அதிக நேரம் இருந்தால் அம்மா புறுபுறுக்கத் தொடங்கிடுவா.. அதை விட dial-up connection வேற..

அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்த நேரம் யாழ் வழங்கிய குடிலில் எழுதுவதாக நண்பியொருத்தி தன் இணைப்பைத் தந்திருந்தாள்.. ஆனால் அவள் பெரிதாக எழுதியிருக்கவில்லை... அவள் மூலமாகவே அறிமுகமானதே இந்த வலைப்பதிவுலகம்.. பின்னர் சயந்தனின் வலைப்பதிவுலக வருகையின் பின் விட்டு விலகாமல் இருக்க முடிந்தது.. அவ்வளவாக திரட்டி பாவிக்காமல் (அப்ப இருந்த ஒரே ஒரு திரட்டி தமிழ்மணம்) வசந்தன், சயந்தன், ஈழநாதன். டி.சே, மு.மயூரன் போன்றவர்களின் வலைகளுக்கு நானாகவே போய் வந்தேன்.. இப்போது போல் இல்லாமல் அவர்கள் அடிக்கடி எழுதவும் செய்தார்கள்.. நட்சத்திரக் கிழமையொன்றில் வசந்தன் 27 பதிவுகள் எழுதியதாக ஞாபகம்.. சில இந்தியப் பதிவர்களை மறந்து விட்டேன்.. ஒன்றரை வருடங்களுக்கு மேல் அரிதான பின்னூட்டங்களுடன் வெறும் வாசகியாக மட்டுமே இருந்தேன்..

2005 இன் பின்னர் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை விட எப்படி வலைபதிவை ஆரம்பிப்பது, தொடர்வது என்பது குறித்த தொழினுட்ப அறிவு தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே SKETCH இனை ஆரம்பித்தேன்.. எவ்வளவோ யோசிச்சும் பிடிச்ச தமிழ்ப் பெயர் கிடைக்காமல் SKETCH என்று சூட்டிக் கொண்டேன்.. முதல் பதிவு போட்டு விட்டு மேலும் என்ன எழுதுவது என்று தெரியாமல் "இலங்கையர் ஒருவரை இனங் காண்பது எப்படி" என்று எனக்கு ஆங்கிலத்தில் வந்த mail ஐ பதிவு போட வேண்டுமென்பதற்காகவே சும்மா தமிழ்படுத்தினேன்.. என்னுடைய பதிவுகளில் அது தான் மிகமும் பிரபலமானது.. நிறைய காலமாக எங்கெங்கோ எல்லாம் சுத்தி பல நண்பர்களூடாக எனக்கே மீள வரும் போது ஒரு சின்ன சந்தோஷம் எட்டிப் பார்க்கும்.. என்ன ஒன்று.. அதன் மொழி வடிவம் மட்டும் தான் என்னுடையது.. :( உள்ளடக்கம் என்னுடையதல்ல..

என்ன தான் நேரமில்லை.. அதனால் எழுதுவதில்லை என்ற பொய்யையும் சின்னப்புள்ளைத் தனமாக எழுதுகிறேன்.. அதனால் எழுதுவதில்லை என்று கொஞ்சம் உண்மையை காரணமாகச் சொன்னாலும் கூட யோசித்துப் பார்த்தால் வாசிப்பதிலும் அடுத்தவர் பதிவில் நொட்டை, நொள்ளை சொல்வதிலும் தான் என் கவனம் கூடுதலாக இருக்கிறது என்று தெரிகிறது.. :) ( நான் பெரிதாகப் பின்னூட்டுவதில்லை.. ஊட்டினால் பெரும்பாலும் அது ஊட்டமாக இருப்பதில்லை)

தினக்குரலில் வலைப்பதிவு அறிமுகம் பகுதியில் SKETCH பற்றி அற்புதமாக எழுதப்பட்டிருந்தது.. எனக்கே ஒரு நிமிடம் இது என் வலைப்பதிவு பற்றித் தான் எழுதப்பட்டிருக்கிறதா என்ற திகைப்பை ஏற்படுத்தியது.. கோசலனுக்கு நன்றிகளை இங்கே குறிப்பிட்டுக் கொள்கிறேன். எழுதப்பட்டதே ஓரிரு இடுகைகளாக இருக்க அதில் "பாவையின் ஓரிரு பதிவுகள் தவிர அனைத்தும் வாசிக்கப்படவேண்டியவையே" என்று முடிக்கப்பட்டிருந்துது.. :)) :))

கணணி அறிமுகம்

வலை பதியிறதைப் பற்றி சொல்ல வந்தால் கணணி தெரிஞ்சது எப்பிடியெண்டும் சொல்ல வேணும் தானே.. முதன் முதலாக நான் கணணியை 1999 இல் யாழ்ப்பாணத்தில் எனது பாடசாலையில் தான் கண்ணால கண்டன்.. அது ஒரு குட்டி room.. கணணி கற்பிக்கிறது என்ட class teacher எண்டதால அப்ப மொனிட்டரா இருந்த நான் அவவை தேடி அடிக்கடி அங்க போக வேண்டி வாறது.. வாசலில நிண்டு கதைக்கிறதுக்கே சப்பாத்து கழட்டிப் போட்டுத் தான் போறது... இது தான் கொம்புயூட்டரா என்று ஆசையோட எட்டிப் பார்த்தால் அதில சும்மா ஏதோ பெட்டி பெட்டியா இருந்திச்சு,. பெரிசா எனக்கு பிடிக்கேல... பெட்டிக்குள்ள பெட்டி பெட்டியா(Ms office) இருக்கு என்று பார்க்கிறதோட சரி.. (A/L அக்காமார்க்கு மட்டும் தான் பாவனைக்கு அனுமதி :( )

அதே வருட இறுதியில் கொழும்புக்கு இடம்பெயர்ந்தேன்.. வந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே எங்கட வீட்டில computer வந்திட்டுது.. அதில படம் பார்க்கிறதும், paint இல கீறுறதுமாக தான் ஆரம்பம் இருந்திச்சே தவிர அதை வைச்சு வேற என்ன செய்யிறது என்று தெரியேல.. அந்த முதல் கிழமையே அண்ணாவுக்கு எங்கையோ கிடைச்ச தமிழ், சிங்கள எழுத்துப் பொறித்த keyboard layout இன் print-out கையில கிடைச்சது.. அதை வைச்சு தான் என் கணணியில் என் தமிழ் ஆரம்பமாயிற்று.. எந்தத் தேவையில்லாமலே தமிழில் அடிக்கப் பழகிக் கொண்டேன்.. (இன்று வரை அண்ணாவுக்கு தமிழில் type பண்ண தெரியாது)

நான் நினைக்கிறன் முதல் பாவிச்ச font 'கழகம்' ஆக இருக்க வேண்டும்.. பாமினி எழுத்தும் கழகமும் ஒரே மாதிரியாகத் தான் இருந்ததாக ஞாபகம்.. அப்பிடியே அக்காவின் result பார்க்க அவவோட கூடப் போய் இணையமும் பரீட்சையமானது.. ஏதோ காரணத்தால் அதன் பிறகு பாமினி பிடிச்சுப் போக கழகத்தை கை விட்டு விட்டேன்..

2004 இன் ஆரம்பத்தில் msn இல் நண்பனொருவனின் status இல் பெட்டி பெட்டியான தெரிவது என்னவென்று ஆராய வெளிக்கிட்டு Unicode அறிமுகமாயிற்று.. ஆரம்பத்தில் சுரதாவின் மாற்றியும் கொஞ்ச காலத்தில் பின் அறிமுகமான e-கலப்பையும் இன்று வரை கை கொடுக்கிறது..

ஒரு கேள்வி

தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுவது எரிச்சலூட்டுவது போல் ஆங்கிலச் சொற்களை தமிழில் எழுதுவது உங்களுக்கு எரிச்சலூட்டுவதில்லையா? இந்தியப் பத்திரிகைகளில் இருந்த இந்தப் பழக்கம் வலையுலகத்தில் எம்மவரிடையேயும் சகஜமாகக் காணப்படுகிறதே....

ஒரு குறிப்பு

இந்த விளையாட்டின் விதிமுறையின் படி நால்வரை அழைக்க வேண்டும்.. சினேகிதி 11 பேரை அழைத்திருப்பதால் அதில நால்வர் நானும் அழைத்ததாகக் கொள்ளவும்.. :)