Thursday, November 27, 2008

சக்தியின் செய்தியும் இன்றைய உரையும் மும்பைக் குண்டுவெடிப்பும்

நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்... இன்றைய 6.55 க்கு சக்தி TV சொல்லும் முதன்மைச்செய்தியில் மாவீரர் நாள் உரை பற்றிய சின்னக்குறிப்பு கூட இல்லை. இந்தியாவின் மும்பைச் செய்திகளைப் பற்றி மட்டுமே சொல்லி முடித்துக் கொண்டார்கள். 45 நிமிடத்துக்குள் தயார் செய்து கொள்ள முடியவில்லையாக்கும் என்று நினைத்துக் கொண்டேன். 8 மணிக்கு சொல்லும் பிரதான செய்திகளுக்கு முன்னதாக 7.45 அளவில் சொல்லும் Headline first இலும் கூட மீண்டும் இந்திய மும்பைக் குண்டுவெடிப்புகள் பற்றி கொஞ்சம் விரிவாகவும் ஆறோ ஏழாவது தடைவையான ஜேர்மன் பிரஜை பற்றிய வன்புணர்வு பற்றியும் குறிப்பிட்டார்கள்.

எதனால் இந்தப் புறக்கணிப்பு?... இலங்கை அரசாங்கத்தின் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலா.. இல்லை, அவர்களே மாவீரர் தின உரையை முக்கியமாகதான கருதவில்லையா?

என்ன தான் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இயங்கினாலும் இலங்கைத் தமிழரின் ஒரே தொலைக்காட்சியென இனங்கொள்ளப்படும் சக்தி TV மாவீரர் தின உரை பற்றிய செய்தியை சேர்த்துக் கொள்ளாதது ஏற்றுக்கொள்ளப்படக்ககூடியதல்ல...

முன்பு சமாதான காலத்தில் செய்தியை இடைநிறுத்தி சக்தி, சூரியன் வானொலிகள் மாவீரர் தின உரையை ஒலிபரப்பினார்கள். இந்த முறை வானொலிகளில் ஒலிபரப்பினார்களோ தெரியவில்லை.. நான் வானொலி கேட்பதில்லை. சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாததால் நிச்சயமாக சக்தி FM இல் ஒலிபரப்பியிருக்க மாட்டார்களெனவே நினைக்கிறேன். தெரியவில்லை.

இதை எழுத ஆரம்பிக்கும் போது கூட பிரதான செய்திகளில் சொல்வார்கள் என்ற எதிர்பார்ப்புடனே ஆரம்பித்தேன். ம்.. தலைப்புச் செய்தியில் அதைத் தவிர எல்லாம் சொன்னார்கள்.. 30 நிமிடச் செய்தியில் இரண்டு நிமிடங்கள் கூட ஓதுக்க முடியாத அவர்கள் தமிழரின் வானொலி என்று சொல்லிக் கொள்வது சரியானது தானா?.. இந்நாட்டின் மேன்மை தங்கிய ஜனாதிபதி மும்பைக் குண்டு வெடிப்பை கண்டிப்பது கூட தலைப்புச் செய்தியில் உள்ளடக்கப்பட்டிருந்தது..


யார் யாரைக் கண்டிப்பது என்று விவஸ்தை இல்லை?? வன்னி மக்களுக்கு மட்டுமில்லை தினம் தினம் கைதுகள், கொலைகள் என தென்னிலங்கையிலும், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கிழக்கிலங்கையிலும் தொடர்ந்து கொண்டிருக்க அதற்கெல்லாம் காரணமானவர் அதையே செய்பவர்களைக் கண்டிக்கிறாராம்.

வன்னியில் தினம் தினம் மக்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் எதையும் கண்டுகொள்ளாத, தமிழகத்தவரது ஆதரவுப் போராட்டங்களைக் கண்டு கொள்ளாத, சக்தி போன்ற ஊடகங்கள் கொழும்பில் ஒரு சிறிய குண்டு வெடிப்பு யாருக்குமே சேதமில்லை என்றாலும் பலமுறை Breaking news என்று மீண்டும் மீண்டும் ஒளிபரப்புகிறார்கள்.

ஒளிபரப்புவதில் பிரச்சினைகள் இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதாக இருப்பினும் ஒரு ஊடகம் என்ற வகையில் அதுவும் தமிழ் மொழியின் சக்தி எனக் கூறிக் கொள்ளும் ஊடகம் இன்றைய உரையைப் புறக்கணித்தது போன்ற செயல் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதல்ல.

ஊடகவியலாளருக்கான அச்சுறுத்தல் காரணமாயின், மேவின் சில்வா மற்றும் முன்னாள் JVP யின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்சவினை அத்துணை பலமாக எதிர்க்கும் போது அச்சுறுத்தல் இருக்கவில்லையா...

மேலும் இந்த மும்பைக் குண்டு வெடிப்பைப் பற்றி பெரும்பான்மையினத்தவர் சந்தோஷம் கொள்வதை வெளிப்படையாக காட்டிக் கொள்கிறார்கள். இந்தப் பரபரப்பில் இந்தியா, இலங்கை விடயத்தில் தலையிடாது.. தமிழகத்தவர் அழுத்தம் கொடுப்பது குறைந்துவிடும் என்ற எண்ணமே அவர்கள் சந்தோஷத்திற்கான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.. அடுத்தவர் வலி இவர்களுக்கு சந்தோஷம்..

Friday, November 14, 2008

கார்த்திகைப் பூ - Gloriosa superba

பொதுவாகவே பூக்களைப் படம் பிடிப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால் படம் பிடிப்பதைத் தாண்டி இந்தப் பூ விஷேடமானது. எனது ஏழு, எட்டு வயதுகளில் அறிமுகமான பூ. வருடத்தின் ஒவ்வொரு கார்த்திகை மாதங்களில் மட்டுமே இந்த பூ மலரும் என்று அறிந்து கொண்டதாலோ இல்லை நானறிந்து அந்த ஓர் இடத்திலேயே இதனைக் காணக் கூடியதாக இருந்ததாலோ அதுவுமில்லாமல் இதன் கண்ணைக் கவரும் நிறமோ அல்லது எல்லாம் சேர்ந்தோ அப்பவே என் விஷேட கவனிப்புக்கு உள்ளாகியது. கார்த்திகை மாதத்தை அண்டிய மாதங்களில் பாடசாலை செல்லும் போது எங்கள் வீட்டிலிருந்து இரண்டு மூன்று வீடுகள் தாண்டியுள்ள வாசிகசாலையை அண்மித்து மலர்ந்திருக்கும் இந்தப் பூவை தினமும் தரிசித்து(?) செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.


இப்போது இந்தப் பூ தமிழர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்ற பூவாகி விட்டது. ஆம்.. தமிழீழ தேசத்தின் தேசியப்பூவாக கார்த்திகைப்பூ தமிழீழ விடுதலைப் புலிகளால் அதிகார பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டின் கார்த்திகை மாதத்தில் கொழும்பிற்கு வெளியே தலாஹேன என்ற இடத்திற்கு அண்மையில் ஓர் வீட்டின் வேலியோரத்தில் காணக் கிடைத்தது. ஒவ்வொரு முறை அந்த இடத்தை அண்மிக்கும் போதும் இறங்கி பூவைப் பறித்து விடத் தோன்றும். ஆனாலும் சிங்களம் அறியாத நான் பழக்கமேயில்லாத புதிய முற்று முழுதான சிங்கள இடத்தில் இறங்குவதிலுள்ள ஆபத்தை உணர்ந்து எண்ணத்தை கைவிட்டு விட்டேன்.

2 வருடங்கள் கடந்து விட்ட பின்னர், 2008 இன் ஆரம்பம் முதல் மீண்டும் தினமும் தலாஹேன தாண்டிச் செல்ல வேண்டிய தேவை. கார்த்திகையில் தான் பூ மலரும் என்றாலும் அந்த வீட்டின் வேலியோரத்தில் செடியாவது இருக்கிறதா என்று அதனை நோக்கியபடியே செல்வது வழமையாகி விட்டிருந்தது.

இப்போது அந்த இடத்திற்கு செல்வதற்கு மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமளவிற்கு இடம் பழக்கப்பட்டிருந்த போதும் இறங்கி ஏறும் அளவிற்கு பழக்கப்படவில்லை.

கடந்த கிழமை வேறு ஒரு மாற்றுப் பாதையூடாக சென்று கொண்டிரந்த போது, Pitakotte என்னும் இடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்துக்கு கிட்டவாக வேறோரு வீட்டின் வேலியோரத்தின் மீண்டும் இந்தப் பூவைக் காணக் கிடைத்தது. இறங்கிப் பறித்து விட எண்ணிய போதும் பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் பத்திரமாக செல்வதற்காக பாதை மூடப்படும் முன்னர் அந்தக் குறிப்பிட்ட வீதியை கடந்து விட வேண்டியிருந்ததால் அன்றும் என் எண்ணத்தை கைவிட வேண்டியதாகிற்று. இருந்தாலும் எங்கே இறங்குவது என்று கவனித்து வைத்துக் கொண்டேன்.



இந்த இடமும் முழு சிங்கள இடமாக இருந்த போதும், மூன்று வருடங்களுக்குள் அரைகுறையாக தெரிந்து கொண்ட சிங்களமும் மாணவ அடையாள அட்டையும் கைகொடுக்கும் என்ற துணிவில் இறங்கி ஒருவாறாக பறித்து விட்டேன். பூ பறிக்கவும் பயப்பட வேண்டிய நிலை.. ம்.. ம்..

அப்படி எதற்கு இந்தப் பூவைப் பறித்தாய் என்று யாரும் கேட்டுவிடாதவரை சந்தோஷம்.

தமிழீழ தேசத்தின் தேசியப்பூ என்பதால் இந்தப் பூவைப் பறிப்பதால் சிக்கல் என்பது ஒருபுறமிருக்க, அதனை அறியாமலிருப்பின் கூட நச்சுத்தன்மையுடைய கார்த்திகைச் செடியின் கிழங்கு தற்கொலைக்கு பாவிக்கப்படுவதால் இந்தப் பூவைப் பறிப்பவர்களை கண்காணிக்கக் கூடும்.

Thursday, January 03, 2008

தண்டிப்பாரா கடவுள்?

அப்போது அந்தக் குழந்தைக்கு ஒன்றரை வயது. கோயில் திருப்பணி செய்யச் செல்லும் அம்மம்மாவுடன் அந்தக் குழந்தையும் சென்றிருந்தது. கோயில் மணியிலிருந்து நீண்டு வந்த கயிறு குழந்தையின் கைக்கெட்டும் தூரத்திலிருக்கவே அந்தக் குழந்தை கயிற்றை இழுத்து விளையாடியது. மணியொலி பிடித்துப் போக மேலும் ஓரிரு தடைவைகள் அதனை தொடர்ந்தது.. மணிச்சத்தம் கேட்டு வந்த அம்மம்மா ஐயோ.. பூஜை செய்யாத நேரம் மணியடிக்கக் கூடாது என்று அந்தக் குழந்தைக்கு சொல்லி வீட்டுக்கு கூட்டி வந்தார்.

வீட்டுக்கு வந்த குழந்தை அழுகையுடன் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியினை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது.. யாருக்கும் எதுவுமே புரியவில்லை.. குழந்தையை வைத்தியரிடம் அழைத்துச் சென்றார்கள். வைத்தியருக்கும் எதுவும் புரியவில்லை. நீரை நோக்கி செல்வதால் குழந்தைக்கு எரிவு ஏற்பட்டிருக்குமோ என்று சோதித்துப் பார்த்தால் உடலில் எந்த அறிகுறியும் இல்லை.. வீட்டுக்கு குழந்தையைக் கொண்டு வந்தாயிற்று. குழந்தை இன்னமும் அழுகையை நிறுத்தியபாடில்லை.

அப்போது வீட்டில் மின்விசிறி இருக்கவில்லை. உடனடியாக மின்விசிறி வாங்கி குழந்தையின் மீது காற்றுப் படும்படியாக வைத்த போதும் பயனேதுமில்லை.

இறுதியில் அம்மப்பா கோயிலில் இருந்து திருநீறு கொண்டு வந்து குழந்தைக்கு பூசினார். என்ன அதிசயம்.. அதுவரை கதறிக் கொண்டிருந்த குழந்தை எதுவுமே நடக்காத மாதிரி தன்பாட்டில் விளையாடத் தொடங்கியது.

அந்தக் குழந்தை என் அண்ணன். இந்தக் கதை என் அம்மாவினால் எனக்குக் கூறப்பட்டது..
கோயில் மணியினை குழந்தை அடித்ததற்கு தண்டனையாக குழந்தைக்கு கடவுள் எரிவினைக் கொடுத்து அது தவறு என் காட்டியுள்ளார் என்பது அவர்களது நம்பிக்கை. பெரிதாக மூடநம்பிக்கை இல்லாதவரென்றாலும் இப்படி சிலதை நம்புகிறார்.

அவர்களது நம்பிக்கை உண்மையானால்...
மற்றையவைகளை விடுவோம்.. ஆனால் 01.01.2008 இல் தன் சந்நிதியில் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் கொல்லப்பட்ட போதும் 25.12.2005 தேவாலயத்தில் ஜோசப் பரராஜசிங்கம' கொல்லப்பட்ட போதும் இந்தக் கடவுளர்கள் எங்கே சென்று விட்டார்கள்?

தன் கோயில்கள் இடிக்கப்பட்ட போதும் தேவாலயங்கள் மீது குண்டுகள் பொழிந்த போதும் தன் இருப்பிடங்களையும் தன்னிடம் தஞ்சமடைந்த மக்களையும் காத்துக் கொள்ள முடியாமல் ஏன் போனது கடவுளால்...

அறியாத வயதில் தெரியாமல் அந்தக் குழந்தை செய்த தவறிற்கு அப்படியொரு தண்டனை கொடுத்திருந்தால் கொலைகாரர்களிற்கும் கொலை செய்யத் தூண்டியவர்களிற்கும் என்ன தண்டனை கொடுத்திருக்கிறார் கடவுள்?

கொலை செய்யத் தூண்டியவர்கள் இன்னுமின்னும் கொலை செய்வதைத் தடுக்காத கடவுள் அப்படியொரு அற்ப விஷயத்திற்கு குழந்தைக்கு தண்டனை கொடுத்திருப்பாரோ...

Note: இது ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட கதை.. இன்னும் பல இவ்வாறான கதைகள் என் வீட்டாரிடமிருந்தும் அறிந்தவர்களிடமிருந்தும் அவர்கள் தம் அனுபவமாக சொல்லக் கேட்டிருக்கிறேன். ..
அறியாத வயதில் வேறு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுக் குழந்தை கத்தியிருக்கும்.. காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாக திருநீறு பூச குழந்தை அழுகையை நிறுத்தியிருக்கும் என்பதை விடுத்து நம்புபவர்களின் நம்பிக்கை உண்மையானால் ஏன் இப்போது இந்தக் கடவுள் அமைதியாக இருக்கிறார்?

தெய்வம் நின்று கொல்லப் போகிறதோ?

Tuesday, January 01, 2008

என்ன இது?

திகதி:
01.01.2008
ஆங்கிலப் புத்தாண்டு

செய்திக்கு முன்னே:
மலர்ந்துள்ள இந்தப் புத்தாண்டு சாந்தியும் சமாதானமும் உள்ள ஆண்டாக அமையட்டும்.

தலைப்புச் செய்தி:
பாராளுமன்ற உறுப்பினர் ரி.மகேஸ்வரன் சுட்டுக் கொலை

செய்தி:
பாராளுமன்ற உறுப்பினர் ரி.மகேஸ்வரன் கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலின் உள்வீதியில் வைத்துச் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மதிப்பிற்குரிய மேன்மை தங்கிய இலங்கை ஜனாதிபதியின் புதுவருட வாழ்த்து:
இப் புதுவருடமானது எமது நாட்டுக்குச் சமாதானத்தை கொண்டு வந்து எமது மக்களிடையே சிறந்த புரிந்துணர்வு, நம்பிக்கை என்பவற்றைக் கட்டியெழுப்பும் என நீங்களும் நானும் எதிர்பார்ப்பதோடு முகங் கொடுக்கவுள்ள சவால்களுக்கு முன்னே நூற்றாண்டு காலமாக எமது சமூகத்திற்கு சக்தியாகவள்ள சகிப்புத்தன்மை பாரம்பரிய விழுமியங்கள் என்பவை மேலும் பலமடைய வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

மேலும்
சக்தியில் இருவாரங்களுக்கு முந்திய மின்னல் நிகழ்ச்சியில் மகேஸ்வரன்.

'கொழும்பிலிருந்து ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படும் பத்துப் பேர் அங்கு நடைபெறும் படுகொலைகளுக்கு காரணம் அத்தோடு அவர்களைப் பற்றிய விபரங்கள் அடங்கிய என்னால் இப்போது தயாரித்துக் கொண்டிருக்கப்படும் அறிக்கை எதிர்வரும் 8 ஆம் நாள் பாராளுமன்றத்தில் அளிக்கப்படுவதோடு இலங்கை சுதந்திர தினத்திற்கு வரும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இற்கு அதன் பிரதி வழங்கப்படும்.

மேலும் இந்தப் படுகொலைகள் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் பின்னணியிலேயே நடைபெறுகிறது."