Tuesday, September 08, 2009

கதை சொல்லப் போறன்.. இது என் கதை - தொடர்

நான் ஒரு கதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில இருக்கிறன்... அதானால Exam, Project, Exhibition, etc etc க்கான தயார்படுத்தல்கள் எல்லாத்தையும் தூக்கி ஓரமாக வைத்து விட்டு இண்டைக்கு எப்பிடியும் கதை சொல்றது என்று முடிவெடுத்திட்டன்..

நான் பதிவெழுத வந்த கதையைச் சொல்ல வேணும் என்று கிருத்திகனும் விமலாதித்தனும் கூப்பிட்டிருக்கிறார்கள்.. நானும் கெதியா எழுதிறன் எண்டு இரண்டு பேருக்கும் சொன்னாலும் இன்னும் ஒரு கிழமைக்கு பிறகு எழுதிறதாகத் தான் யோசிச்சு வைச்சிருந்தன்..

கதைக்குள் கதை

ஏன் நான் இண்டைக்கு எப்பிடியெண்டாலும் இந்தக் கதையை சொல்றது என்று முடிவெடுத்தன் எண்ட கதையை முதலில சொல்லிப் போட்டு அங்கால போறன்..
வந்தியத்தேவன் கீத் இன் பதிவில் "கீத் எங்கள் கல்லூரிக்கே உரிய நேரம் தவறாமை போல் நீயும் உடனே என் விளையாட்டை விளையாடிவிட்டார் நன்றிகள்." என்று பின்னூட்டியிருக்கிறார்..
அதென்ன அவையின்ட கல்லூரிக்கே(என் சகோதர பாடசாலை) உரிய நேரம் தவறாமை? அப்ப நாங்கள் எல்லாம் என்ன நேரம் தவறுற ஆட்களோ? தவறித் தான் போடுறன் என்டாலும் கூட எப்பிடி இப்பிடிச் சொல்லலாம்... :)

அடுத்தது கிருத்திகன், விமலாதித்தன் என்று இரண்டு பேர் கூப்பிட்ட பிறகும் இன்னும் பின்னுக்கு நிக்கிறது அவ்வளவா சரியில்லைத் தானே...

அதோட சுபானு தன் பதிவில் நான் விருப்பி வாசித்த முதல் வலைப்பூ அந்த SKETCH என்று குறிப்பிட்டிருப்பது (இது தான் உடனடிக் காரணம்) அப்பிடியே உச்சி குளிர வைச்சு இந்த 1008 வேலைக்கிடையிலயும் facebook இல் farm ville இல் farm செய்யிற நேரத்தை மிச்சம் பிடிச்சு எப்பிடியாவது எழுதிப் போடு என்று எழுத வைச்சிட்டுது..

இனி கதை

எனக்கு எப்போதுமே எழுதுவதை விட வாசிப்பதில் தான் விருப்பம் அதிகமாக இருந்தது.. இருக்கிறது.. 2004 களில் எனக்காக ஒரு தளம் வைத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.. அந்த நேரம் geocities இன் பாவனை தான் இருந்தது.. அதில் எதை உள்ளடக்குவது என்பதில் குழப்பமாக இருந்தது.. A/L படிக்கிற காலமென்பதால் வீட்டில் இணையத்தில் அதிக நேரம் இருந்தால் அம்மா புறுபுறுக்கத் தொடங்கிடுவா.. அதை விட dial-up connection வேற..

அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்த நேரம் யாழ் வழங்கிய குடிலில் எழுதுவதாக நண்பியொருத்தி தன் இணைப்பைத் தந்திருந்தாள்.. ஆனால் அவள் பெரிதாக எழுதியிருக்கவில்லை... அவள் மூலமாகவே அறிமுகமானதே இந்த வலைப்பதிவுலகம்.. பின்னர் சயந்தனின் வலைப்பதிவுலக வருகையின் பின் விட்டு விலகாமல் இருக்க முடிந்தது.. அவ்வளவாக திரட்டி பாவிக்காமல் (அப்ப இருந்த ஒரே ஒரு திரட்டி தமிழ்மணம்) வசந்தன், சயந்தன், ஈழநாதன். டி.சே, மு.மயூரன் போன்றவர்களின் வலைகளுக்கு நானாகவே போய் வந்தேன்.. இப்போது போல் இல்லாமல் அவர்கள் அடிக்கடி எழுதவும் செய்தார்கள்.. நட்சத்திரக் கிழமையொன்றில் வசந்தன் 27 பதிவுகள் எழுதியதாக ஞாபகம்.. சில இந்தியப் பதிவர்களை மறந்து விட்டேன்.. ஒன்றரை வருடங்களுக்கு மேல் அரிதான பின்னூட்டங்களுடன் வெறும் வாசகியாக மட்டுமே இருந்தேன்..

2005 இன் பின்னர் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை விட எப்படி வலைபதிவை ஆரம்பிப்பது, தொடர்வது என்பது குறித்த தொழினுட்ப அறிவு தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே SKETCH இனை ஆரம்பித்தேன்.. எவ்வளவோ யோசிச்சும் பிடிச்ச தமிழ்ப் பெயர் கிடைக்காமல் SKETCH என்று சூட்டிக் கொண்டேன்.. முதல் பதிவு போட்டு விட்டு மேலும் என்ன எழுதுவது என்று தெரியாமல் "இலங்கையர் ஒருவரை இனங் காண்பது எப்படி" என்று எனக்கு ஆங்கிலத்தில் வந்த mail ஐ பதிவு போட வேண்டுமென்பதற்காகவே சும்மா தமிழ்படுத்தினேன்.. என்னுடைய பதிவுகளில் அது தான் மிகமும் பிரபலமானது.. நிறைய காலமாக எங்கெங்கோ எல்லாம் சுத்தி பல நண்பர்களூடாக எனக்கே மீள வரும் போது ஒரு சின்ன சந்தோஷம் எட்டிப் பார்க்கும்.. என்ன ஒன்று.. அதன் மொழி வடிவம் மட்டும் தான் என்னுடையது.. :( உள்ளடக்கம் என்னுடையதல்ல..

என்ன தான் நேரமில்லை.. அதனால் எழுதுவதில்லை என்ற பொய்யையும் சின்னப்புள்ளைத் தனமாக எழுதுகிறேன்.. அதனால் எழுதுவதில்லை என்று கொஞ்சம் உண்மையை காரணமாகச் சொன்னாலும் கூட யோசித்துப் பார்த்தால் வாசிப்பதிலும் அடுத்தவர் பதிவில் நொட்டை, நொள்ளை சொல்வதிலும் தான் என் கவனம் கூடுதலாக இருக்கிறது என்று தெரிகிறது.. :) ( நான் பெரிதாகப் பின்னூட்டுவதில்லை.. ஊட்டினால் பெரும்பாலும் அது ஊட்டமாக இருப்பதில்லை)

தினக்குரலில் வலைப்பதிவு அறிமுகம் பகுதியில் SKETCH பற்றி அற்புதமாக எழுதப்பட்டிருந்தது.. எனக்கே ஒரு நிமிடம் இது என் வலைப்பதிவு பற்றித் தான் எழுதப்பட்டிருக்கிறதா என்ற திகைப்பை ஏற்படுத்தியது.. கோசலனுக்கு நன்றிகளை இங்கே குறிப்பிட்டுக் கொள்கிறேன். எழுதப்பட்டதே ஓரிரு இடுகைகளாக இருக்க அதில் "பாவையின் ஓரிரு பதிவுகள் தவிர அனைத்தும் வாசிக்கப்படவேண்டியவையே" என்று முடிக்கப்பட்டிருந்துது.. :)) :))

கணணி அறிமுகம்

வலை பதியிறதைப் பற்றி சொல்ல வந்தால் கணணி தெரிஞ்சது எப்பிடியெண்டும் சொல்ல வேணும் தானே.. முதன் முதலாக நான் கணணியை 1999 இல் யாழ்ப்பாணத்தில் எனது பாடசாலையில் தான் கண்ணால கண்டன்.. அது ஒரு குட்டி room.. கணணி கற்பிக்கிறது என்ட class teacher எண்டதால அப்ப மொனிட்டரா இருந்த நான் அவவை தேடி அடிக்கடி அங்க போக வேண்டி வாறது.. வாசலில நிண்டு கதைக்கிறதுக்கே சப்பாத்து கழட்டிப் போட்டுத் தான் போறது... இது தான் கொம்புயூட்டரா என்று ஆசையோட எட்டிப் பார்த்தால் அதில சும்மா ஏதோ பெட்டி பெட்டியா இருந்திச்சு,. பெரிசா எனக்கு பிடிக்கேல... பெட்டிக்குள்ள பெட்டி பெட்டியா(Ms office) இருக்கு என்று பார்க்கிறதோட சரி.. (A/L அக்காமார்க்கு மட்டும் தான் பாவனைக்கு அனுமதி :( )

அதே வருட இறுதியில் கொழும்புக்கு இடம்பெயர்ந்தேன்.. வந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே எங்கட வீட்டில computer வந்திட்டுது.. அதில படம் பார்க்கிறதும், paint இல கீறுறதுமாக தான் ஆரம்பம் இருந்திச்சே தவிர அதை வைச்சு வேற என்ன செய்யிறது என்று தெரியேல.. அந்த முதல் கிழமையே அண்ணாவுக்கு எங்கையோ கிடைச்ச தமிழ், சிங்கள எழுத்துப் பொறித்த keyboard layout இன் print-out கையில கிடைச்சது.. அதை வைச்சு தான் என் கணணியில் என் தமிழ் ஆரம்பமாயிற்று.. எந்தத் தேவையில்லாமலே தமிழில் அடிக்கப் பழகிக் கொண்டேன்.. (இன்று வரை அண்ணாவுக்கு தமிழில் type பண்ண தெரியாது)

நான் நினைக்கிறன் முதல் பாவிச்ச font 'கழகம்' ஆக இருக்க வேண்டும்.. பாமினி எழுத்தும் கழகமும் ஒரே மாதிரியாகத் தான் இருந்ததாக ஞாபகம்.. அப்பிடியே அக்காவின் result பார்க்க அவவோட கூடப் போய் இணையமும் பரீட்சையமானது.. ஏதோ காரணத்தால் அதன் பிறகு பாமினி பிடிச்சுப் போக கழகத்தை கை விட்டு விட்டேன்..

2004 இன் ஆரம்பத்தில் msn இல் நண்பனொருவனின் status இல் பெட்டி பெட்டியான தெரிவது என்னவென்று ஆராய வெளிக்கிட்டு Unicode அறிமுகமாயிற்று.. ஆரம்பத்தில் சுரதாவின் மாற்றியும் கொஞ்ச காலத்தில் பின் அறிமுகமான e-கலப்பையும் இன்று வரை கை கொடுக்கிறது..

ஒரு கேள்வி

தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுவது எரிச்சலூட்டுவது போல் ஆங்கிலச் சொற்களை தமிழில் எழுதுவது உங்களுக்கு எரிச்சலூட்டுவதில்லையா? இந்தியப் பத்திரிகைகளில் இருந்த இந்தப் பழக்கம் வலையுலகத்தில் எம்மவரிடையேயும் சகஜமாகக் காணப்படுகிறதே....

ஒரு குறிப்பு

இந்த விளையாட்டின் விதிமுறையின் படி நால்வரை அழைக்க வேண்டும்.. சினேகிதி 11 பேரை அழைத்திருப்பதால் அதில நால்வர் நானும் அழைத்ததாகக் கொள்ளவும்.. :)

Thursday, February 05, 2009

சுதந்திரத் திருநாட்டில் ஓர் சுதந்திர நாள்

சுதந்திரமடைந்து 61 வருடங்கள் ஆகிவிட்டதாக சொல்லப்பட்டாலும் எனக்கென்னவோ நேற்றிலிருந்து தான் சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் நிலைக்கு நாங்கள் வந்து விட்டதாக தோன்றுகிறது.. இல்லையா பின்னே.. நாட்டை அழித்த பயங்கரவாதிகள் அழித்து ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் இனித் தானே நாங்கள் சுதந்திரமாக நடமாடலாம்.. எங்கள் கருத்துக்களைப் பகிரங்கமாக கூறலாம்..

உலகெங்கும் சிறப்பாக சுதந்திரதினத்துக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட கொண்டாட்டங்களை கண்டு மகிழ்ச்சியடைந்த எங்கள் தலைவர் வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்களை, அமைதி திரும்பிய நாட்டுக்கு அழைக்கிறார்.. செவி சாய்ப்பீர்களா?

நேற்றைய சுதந்திர தினத்தில் எங்கள் மதிப்புக்குரிய, மேன்மை தங்கிய இன்னும் பல அடைமொழிகளைத் தன்னகத்தே கொண்ட, அடைமொழிகளுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் கெளரவ மகிந்த ராஜபக்ஷே அவர்களின் உரையை கேட்டு புளகாங்கிதமடைந்ததன் விளைவு, சுதந்திர திருநாட்டின் குடிமகளான நான் இனியும் புனைபெயர் கொண்டிராது என் சொந்தப் பெயரில் வருடத்துக்கு ஓரிரு தடைவை தான் நானே எட்டிப்பார்க்கும் இந்தப் வலைப்பதிவை கொண்டு நடாத்த முடிவெடுத்திருக்கிறன்.. ஆக பாவை என்ற பெயரில் 3, 4 வருடங்களாக எழுதப்பட்டு வந்த இந்தப் பதிவு இன்று முதல் சாயினி ஆகிய என்னால் தான் கொண்டு நடாத்தப்பட்டிருக்கிறது (எங்க நடாத்தப்பட்டிருக்கிறது) என்ற செய்தியை உலகெங்கும் வாழும் அறிந்த அறியாத எல்லாருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறேன்.


வன்னி மண்ணில் வித்தை காட்டி அலுத்துப் போன எங்கள் முப்படையினரும் காலிமுகத்திடலிலும் இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் தொலைக்காட்சி வழியாகவும் வித்தை காட்டினர்.. விமானப்படையின் பறப்பு வித்தையை பல காலங்களின் பின் நேரில் பார்த்து இரசிக்க கிடைத்தது என் பாக்கியம்..

சுதந்திரதினக் கொண்டாட்டத்துக்காக 3ம் திகதி வகுப்பு இல்லை என்று சொல்ல விரும்பாத ஒரு வாத்தியார் இலங்கை இந்திய 3வது ஒருநாள் சர்வதேச போட்டியை முன்னிட்டு எங்களுக்கு peace of mind இருக்காது என்ற காரணத்தால் வகுப்பு இல்லை என்று அறிவிக்க அடுத்த வாத்தியாரோ சுதந்திரதினத்தன்று காலை 8 முதல் 1 வரை மேலதிக வகுப்பு என அறிவித்திருந்தார். சுதந்திரத்தன்று கூடவா சுதந்திரமாக நடமாட முடியாது என்று எண்ணினார் போலும்.. அறிவித்த பின்னர் தான் அன்று காலை சுதந்திரமாக நடமாட முடியாது என்று தெரிந்து கொண்டவர் காலையில் வீதிகள் மூடப்படுவதால் மதியத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தொலைபேசி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி என எல்லாவிதத்திலும் அறிவித்திருந்தார்.. மனுஷன் இந்தளவு கஷ்டப்பட்டு வகுப்பு வைக்குதே என்று போனால், வீதி வெறிச்சோடிப் போயிருந்தது..

ஆனாலும் எங்கெங்கு காணினும் இலங்கைத் திருநாட்டின் தேசிய கொடிகள் கண்ணுக்கு குளிர்ச்சியைக் கொடுக்க வெள்ளவத்தை வந்தவுடன் கண்ணை மூடவே முடியாதளவுக்கு குளிர்ச்சி தாங்க முடியாமல் போயிற்று... வீதியில் சென்ற வாகனங்கள் தத்தம் தேசப்பற்றிற்கு ஏற்ப பல அளவுகளில் கொடிகளை பறக்க விட்டிருந்தார்கள்.. சுதந்திரக் காற்றை அதிகமாக சுவாசிப்பதாலோ என்னவோ வெள்ளவத்தைவாசிகள்(?) தங்கள் கடைகளையும் வீதிகளையும் மிக நன்றாக அலங்கரித்திருந்தார்கள். தேசப்பற்றை எண்ணி ஆனந்தக் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தவளை பம்பலப்பிட்டி சந்தியில் நடத்துனர் தட்டி, கொள்ளுப்பிட்டிக்கு எங்க போகிறாய், இது போகாது.. இங்கேயே இறங்கி விடுங்கள் என்று சொன்னது, கட்டுப்படுத்த வைத்தது..

இலங்கையின் தமிழ்க் குடிமகளாக சுதந்திரத் திருநாட்டில், கொழும்பின் இதயமெனப்படும் கொள்ளுப்பிட்டியின் சுதந்திரக்காற்றை சுவாசிக்கக் கிடைத்த பேற்றினை நினைத்தும் நட்ட நடு வெயிலிலும் நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று மகிந்த அரசு எனக்கு புரிய வைக்க எடுத்த முயற்சியை எண்ணி மகிழ்வுற்றும் நடக்க ஆரம்பித்தேன்..
வெறிச்சோடி இருந்த வீதிகளையும் மூடப்பட்ட கட்டடங்களையும் தனியே இரசித்து சென்ற வேளை, சோதனை சாவடியில் நின்ற இராணுவத்தினர் மட்டும், இல்லை பிள்ளை.. நாங்களும் இதையெல்லாம் காலையிலிருந்து இரசித்துக் கொண்டிருக்கிறோம் கூறுவது போல் ஆறுதளித்தனர்..

என்ன தான் போக்குவரத்தில் பிரச்சினை இருந்தாலும் வகுப்பிற்கு கணிசமான மாணவர்கள் வந்திருந்தது உண்மையில் சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறமோ அல்லது எது நடப்பினும் எதிர்கொள்ள தயாராகி விட்டோமோ என்று யோசிக்க வைத்தது.. ஆனாலும் 1 மணி வகுப்பிற்கு வழமையாக 12.45 க்கு வந்து விடும் நேரம் தவறாமையை அதீதமாக கடைப்பிடிக்கும் எங்கள் வாத்தியார் நான் நடந்து சென்றதால் தாமதமாக போயிருந்ததை விட தாமதமாக வந்திருந்தார்.. காரில் வந்தவரையும் போக்குவரத்து பாதிச்சிருக்கிறது என்பது மகிந்த அரசின் பாரபட்சம் பாராமையை வெளிப்படுத்தியது..

வகுப்பு முடிந்து வெளியே வரும் போது பாதை திறக்கப்பட்டு ஓரிரு வாகனங்கள் ஓட ஆரம்பித்திருந்தன.. நடமாட்டம் அற்ற வீதிகளைத் தாண்டி வெள்ளவத்தை, தெகிவளையை அடைந்த போது ஓரளவு நடமாட்டம் இருந்தது.. எங்கள் மக்கள் யார்? சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் மக்களல்லவா? எது நடந்தாலும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவது எங்களைத் தவிர யாரால் முடியும்?

யாழ்ப்பாணத்து மக்களும் அலங்கரிக்கப்பட்ட வீதிகளில் வாசஸ்தலங்களில் தேசியக் கொடிகளை பறக்கவிட்டு சுதந்திரநாட்டு பிரஜைகளாக தங்களை காட்டிக் கொண்டதாக கேள்வி..

வாழ்க சுதந்திரம்.. வாழ்க ஜனநாயகம்...

Thursday, November 27, 2008

சக்தியின் செய்தியும் இன்றைய உரையும் மும்பைக் குண்டுவெடிப்பும்

நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்... இன்றைய 6.55 க்கு சக்தி TV சொல்லும் முதன்மைச்செய்தியில் மாவீரர் நாள் உரை பற்றிய சின்னக்குறிப்பு கூட இல்லை. இந்தியாவின் மும்பைச் செய்திகளைப் பற்றி மட்டுமே சொல்லி முடித்துக் கொண்டார்கள். 45 நிமிடத்துக்குள் தயார் செய்து கொள்ள முடியவில்லையாக்கும் என்று நினைத்துக் கொண்டேன். 8 மணிக்கு சொல்லும் பிரதான செய்திகளுக்கு முன்னதாக 7.45 அளவில் சொல்லும் Headline first இலும் கூட மீண்டும் இந்திய மும்பைக் குண்டுவெடிப்புகள் பற்றி கொஞ்சம் விரிவாகவும் ஆறோ ஏழாவது தடைவையான ஜேர்மன் பிரஜை பற்றிய வன்புணர்வு பற்றியும் குறிப்பிட்டார்கள்.

எதனால் இந்தப் புறக்கணிப்பு?... இலங்கை அரசாங்கத்தின் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலா.. இல்லை, அவர்களே மாவீரர் தின உரையை முக்கியமாகதான கருதவில்லையா?

என்ன தான் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இயங்கினாலும் இலங்கைத் தமிழரின் ஒரே தொலைக்காட்சியென இனங்கொள்ளப்படும் சக்தி TV மாவீரர் தின உரை பற்றிய செய்தியை சேர்த்துக் கொள்ளாதது ஏற்றுக்கொள்ளப்படக்ககூடியதல்ல...

முன்பு சமாதான காலத்தில் செய்தியை இடைநிறுத்தி சக்தி, சூரியன் வானொலிகள் மாவீரர் தின உரையை ஒலிபரப்பினார்கள். இந்த முறை வானொலிகளில் ஒலிபரப்பினார்களோ தெரியவில்லை.. நான் வானொலி கேட்பதில்லை. சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாததால் நிச்சயமாக சக்தி FM இல் ஒலிபரப்பியிருக்க மாட்டார்களெனவே நினைக்கிறேன். தெரியவில்லை.

இதை எழுத ஆரம்பிக்கும் போது கூட பிரதான செய்திகளில் சொல்வார்கள் என்ற எதிர்பார்ப்புடனே ஆரம்பித்தேன். ம்.. தலைப்புச் செய்தியில் அதைத் தவிர எல்லாம் சொன்னார்கள்.. 30 நிமிடச் செய்தியில் இரண்டு நிமிடங்கள் கூட ஓதுக்க முடியாத அவர்கள் தமிழரின் வானொலி என்று சொல்லிக் கொள்வது சரியானது தானா?.. இந்நாட்டின் மேன்மை தங்கிய ஜனாதிபதி மும்பைக் குண்டு வெடிப்பை கண்டிப்பது கூட தலைப்புச் செய்தியில் உள்ளடக்கப்பட்டிருந்தது..


யார் யாரைக் கண்டிப்பது என்று விவஸ்தை இல்லை?? வன்னி மக்களுக்கு மட்டுமில்லை தினம் தினம் கைதுகள், கொலைகள் என தென்னிலங்கையிலும், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கிழக்கிலங்கையிலும் தொடர்ந்து கொண்டிருக்க அதற்கெல்லாம் காரணமானவர் அதையே செய்பவர்களைக் கண்டிக்கிறாராம்.

வன்னியில் தினம் தினம் மக்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் எதையும் கண்டுகொள்ளாத, தமிழகத்தவரது ஆதரவுப் போராட்டங்களைக் கண்டு கொள்ளாத, சக்தி போன்ற ஊடகங்கள் கொழும்பில் ஒரு சிறிய குண்டு வெடிப்பு யாருக்குமே சேதமில்லை என்றாலும் பலமுறை Breaking news என்று மீண்டும் மீண்டும் ஒளிபரப்புகிறார்கள்.

ஒளிபரப்புவதில் பிரச்சினைகள் இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதாக இருப்பினும் ஒரு ஊடகம் என்ற வகையில் அதுவும் தமிழ் மொழியின் சக்தி எனக் கூறிக் கொள்ளும் ஊடகம் இன்றைய உரையைப் புறக்கணித்தது போன்ற செயல் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதல்ல.

ஊடகவியலாளருக்கான அச்சுறுத்தல் காரணமாயின், மேவின் சில்வா மற்றும் முன்னாள் JVP யின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்சவினை அத்துணை பலமாக எதிர்க்கும் போது அச்சுறுத்தல் இருக்கவில்லையா...

மேலும் இந்த மும்பைக் குண்டு வெடிப்பைப் பற்றி பெரும்பான்மையினத்தவர் சந்தோஷம் கொள்வதை வெளிப்படையாக காட்டிக் கொள்கிறார்கள். இந்தப் பரபரப்பில் இந்தியா, இலங்கை விடயத்தில் தலையிடாது.. தமிழகத்தவர் அழுத்தம் கொடுப்பது குறைந்துவிடும் என்ற எண்ணமே அவர்கள் சந்தோஷத்திற்கான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.. அடுத்தவர் வலி இவர்களுக்கு சந்தோஷம்..