நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்... இன்றைய 6.55 க்கு சக்தி TV சொல்லும் முதன்மைச்செய்தியில் மாவீரர் நாள் உரை பற்றிய சின்னக்குறிப்பு கூட இல்லை. இந்தியாவின் மும்பைச் செய்திகளைப் பற்றி மட்டுமே சொல்லி முடித்துக் கொண்டார்கள். 45 நிமிடத்துக்குள் தயார் செய்து கொள்ள முடியவில்லையாக்கும் என்று நினைத்துக் கொண்டேன். 8 மணிக்கு சொல்லும் பிரதான செய்திகளுக்கு முன்னதாக 7.45 அளவில் சொல்லும் Headline first இலும் கூட மீண்டும் இந்திய மும்பைக் குண்டுவெடிப்புகள் பற்றி கொஞ்சம் விரிவாகவும் ஆறோ ஏழாவது தடைவையான ஜேர்மன் பிரஜை பற்றிய வன்புணர்வு பற்றியும் குறிப்பிட்டார்கள்.
எதனால் இந்தப் புறக்கணிப்பு?... இலங்கை அரசாங்கத்தின் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலா.. இல்லை, அவர்களே மாவீரர் தின உரையை முக்கியமாகதான கருதவில்லையா?
என்ன தான் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இயங்கினாலும் இலங்கைத் தமிழரின் ஒரே தொலைக்காட்சியென இனங்கொள்ளப்படும் சக்தி TV மாவீரர் தின உரை பற்றிய செய்தியை சேர்த்துக் கொள்ளாதது ஏற்றுக்கொள்ளப்படக்ககூடியதல்ல...
முன்பு சமாதான காலத்தில் செய்தியை இடைநிறுத்தி சக்தி, சூரியன் வானொலிகள் மாவீரர் தின உரையை ஒலிபரப்பினார்கள். இந்த முறை வானொலிகளில் ஒலிபரப்பினார்களோ தெரியவில்லை.. நான் வானொலி கேட்பதில்லை. சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாததால் நிச்சயமாக சக்தி FM இல் ஒலிபரப்பியிருக்க மாட்டார்களெனவே நினைக்கிறேன். தெரியவில்லை.
இதை எழுத ஆரம்பிக்கும் போது கூட பிரதான செய்திகளில் சொல்வார்கள் என்ற எதிர்பார்ப்புடனே ஆரம்பித்தேன். ம்.. தலைப்புச் செய்தியில் அதைத் தவிர எல்லாம் சொன்னார்கள்.. 30 நிமிடச் செய்தியில் இரண்டு நிமிடங்கள் கூட ஓதுக்க முடியாத அவர்கள் தமிழரின் வானொலி என்று சொல்லிக் கொள்வது சரியானது தானா?.. இந்நாட்டின் மேன்மை தங்கிய ஜனாதிபதி மும்பைக் குண்டு வெடிப்பை கண்டிப்பது கூட தலைப்புச் செய்தியில் உள்ளடக்கப்பட்டிருந்தது..
யார் யாரைக் கண்டிப்பது என்று விவஸ்தை இல்லை?? வன்னி மக்களுக்கு மட்டுமில்லை தினம் தினம் கைதுகள், கொலைகள் என தென்னிலங்கையிலும், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கிழக்கிலங்கையிலும் தொடர்ந்து கொண்டிருக்க அதற்கெல்லாம் காரணமானவர் அதையே செய்பவர்களைக் கண்டிக்கிறாராம்.
வன்னியில் தினம் தினம் மக்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் எதையும் கண்டுகொள்ளாத, தமிழகத்தவரது ஆதரவுப் போராட்டங்களைக் கண்டு கொள்ளாத, சக்தி போன்ற ஊடகங்கள் கொழும்பில் ஒரு சிறிய குண்டு வெடிப்பு யாருக்குமே சேதமில்லை என்றாலும் பலமுறை Breaking news என்று மீண்டும் மீண்டும் ஒளிபரப்புகிறார்கள்.
ஒளிபரப்புவதில் பிரச்சினைகள் இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதாக இருப்பினும் ஒரு ஊடகம் என்ற வகையில் அதுவும் தமிழ் மொழியின் சக்தி எனக் கூறிக் கொள்ளும் ஊடகம் இன்றைய உரையைப் புறக்கணித்தது போன்ற செயல் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதல்ல.
ஊடகவியலாளருக்கான அச்சுறுத்தல் காரணமாயின், மேவின் சில்வா மற்றும் முன்னாள் JVP யின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்சவினை அத்துணை பலமாக எதிர்க்கும் போது அச்சுறுத்தல் இருக்கவில்லையா...
மேலும் இந்த மும்பைக் குண்டு வெடிப்பைப் பற்றி பெரும்பான்மையினத்தவர் சந்தோஷம் கொள்வதை வெளிப்படையாக காட்டிக் கொள்கிறார்கள். இந்தப் பரபரப்பில் இந்தியா, இலங்கை விடயத்தில் தலையிடாது.. தமிழகத்தவர் அழுத்தம் கொடுப்பது குறைந்துவிடும் என்ற எண்ணமே அவர்கள் சந்தோஷத்திற்கான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.. அடுத்தவர் வலி இவர்களுக்கு சந்தோஷம்..
Thursday, November 27, 2008
சக்தியின் செய்தியும் இன்றைய உரையும் மும்பைக் குண்டுவெடிப்பும்
Posted by
Chayini
at
8:39 PM
6
comments
Labels: என் பார்வை
Friday, November 14, 2008
கார்த்திகைப் பூ - Gloriosa superba
பொதுவாகவே பூக்களைப் படம் பிடிப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால் படம் பிடிப்பதைத் தாண்டி இந்தப் பூ விஷேடமானது. எனது ஏழு, எட்டு வயதுகளில் அறிமுகமான பூ. வருடத்தின் ஒவ்வொரு கார்த்திகை மாதங்களில் மட்டுமே இந்த பூ மலரும் என்று அறிந்து கொண்டதாலோ இல்லை நானறிந்து அந்த ஓர் இடத்திலேயே இதனைக் காணக் கூடியதாக இருந்ததாலோ அதுவுமில்லாமல் இதன் கண்ணைக் கவரும் நிறமோ அல்லது எல்லாம் சேர்ந்தோ அப்பவே என் விஷேட கவனிப்புக்கு உள்ளாகியது. கார்த்திகை மாதத்தை அண்டிய மாதங்களில் பாடசாலை செல்லும் போது எங்கள் வீட்டிலிருந்து இரண்டு மூன்று வீடுகள் தாண்டியுள்ள வாசிகசாலையை அண்மித்து மலர்ந்திருக்கும் இந்தப் பூவை தினமும் தரிசித்து(?) செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.
இப்போது இந்தப் பூ தமிழர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்ற பூவாகி விட்டது. ஆம்.. தமிழீழ தேசத்தின் தேசியப்பூவாக கார்த்திகைப்பூ தமிழீழ விடுதலைப் புலிகளால் அதிகார பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

2 வருடங்கள் கடந்து விட்ட பின்னர், 2008 இன் ஆரம்பம் முதல் மீண்டும் தினமும் தலாஹேன தாண்டிச் செல்ல வேண்டிய தேவை. கார்த்திகையில் தான் பூ மலரும் என்றாலும் அந்த வீட்டின் வேலியோரத்தில் செடியாவது இருக்கிறதா என்று அதனை நோக்கியபடியே செல்வது வழமையாகி விட்டிருந்தது.
இப்போது அந்த இடத்திற்கு செல்வதற்கு மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமளவிற்கு இடம் பழக்கப்பட்டிருந்த போதும் இறங்கி ஏறும் அளவிற்கு பழக்கப்படவில்லை.
கடந்த கிழமை வேறு ஒரு மாற்றுப் பாதையூடாக சென்று கொண்டிரந்த போது, Pitakotte என்னும் இடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்துக்கு கிட்டவாக வேறோரு வீட்டின் வேலியோரத்தின் மீண்டும் இந்தப் பூவைக் காணக் கிடைத்தது. இறங்கிப் பறித்து விட எண்ணிய போதும் பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் பத்திரமாக செல்வதற்காக பாதை மூடப்படும் முன்னர் அந்தக் குறிப்பிட்ட வீதியை கடந்து விட வேண்டியிருந்ததால் அன்றும் என் எண்ணத்தை கைவிட வேண்டியதாகிற்று. இருந்தாலும் எங்கே இறங்குவது என்று கவனித்து வைத்துக் கொண்டேன்.

இந்த இடமும் முழு சிங்கள இடமாக இருந்த போதும், மூன்று வருடங்களுக்குள் அரைகுறையாக தெரிந்து கொண்ட சிங்களமும் மாணவ அடையாள அட்டையும் கைகொடுக்கும் என்ற துணிவில் இறங்கி ஒருவாறாக பறித்து விட்டேன். பூ பறிக்கவும் பயப்பட வேண்டிய நிலை.. ம்.. ம்..
அப்படி எதற்கு இந்தப் பூவைப் பறித்தாய் என்று யாரும் கேட்டுவிடாதவரை சந்தோஷம்.
தமிழீழ தேசத்தின் தேசியப்பூ என்பதால் இந்தப் பூவைப் பறிப்பதால் சிக்கல் என்பது ஒருபுறமிருக்க, அதனை அறியாமலிருப்பின் கூட நச்சுத்தன்மையுடைய கார்த்திகைச் செடியின் கிழங்கு தற்கொலைக்கு பாவிக்கப்படுவதால் இந்தப் பூவைப் பறிப்பவர்களை கண்காணிக்கக் கூடும்.
Posted by
Chayini
at
5:07 PM
7
comments
Labels: நிழற்படம்