Wednesday, October 19, 2005

புத்த பிக்குவோடு ஒருநாள்........

யாழ்ப்பாணத்தில் நான் இருக்கும் மட்டும் புத்த பிக்குககள் எவரையும் நேரில் கண்டதில்லை. ஐந்து வயதிலிருந்து கொழும்பு வரும் வரை யாழ்ப்பாணத்தில் மின்சார வசதி இல்லாததால் தொலைக்காட்சியிலும் பார்த்ததில்லை. புத்தகங்கள் மூலமாக சித்தார்த்தர் புத்தராக மாறியதைத் தவிர வேறு எதுவும் புத்த மதத்தைப் பற்றியோ பிக்குகளைப் பற்றியோ அறிந்திருக்கவில்லை.

பத்திரிகைகளிலிருந்தும் நான் வளர்ந்த சூழலிலிருந்தும் புத்த பிக்குகள் எல்லோரும் தமிழருக்கு எதிரானவர்கள், மதம் மேல் தீவிர பற்றுள்ளவர்களாகக் காட்டிக் கொள்ளும் இனவெறியர்கள்.. அவ்வளவு தான்.

அப்பவெல்லாம் நாங்கள் சின்னப்பிள்ளைகள் சேர்ந்து
“புத்தம் சரணம் கச்சாமி
புத்தற்ற ----------- கிச்சாமி
-------------------------------------------
-------------------------------------------” என்று புத்தம் சரணம் கச்சாமியின் வரிகளை மாற்றி கேலியாகப் பாடுவோம்..

பின்னர் புத்த மதத்தைப் பற்றிய எனது கருத்துகள் மாறினாலும் எனக்குள் வேறூன்றிப் போயிருந்த வெறுப்பின் காரணமாக இப்போதும் புத்த பிக்குகள் மதிக்கப்படவேண்டியவர்கள் என்று என்னால் கருதவே முடியவில்லை. உண்மையாக புத்த மதம் கூறுவது போன்று அதனைப் பின்பற்றி நெறிப்படி வாழும் பிக்குகள் இருந்தாலும், வறுமையின் நிமித்தம் பிக்குகளாக மாற்றப்படும் சிறுவர்கள், கேவலமான அரசியல்வாதிகளுக்குத் தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்களில்லை என்ற மாதிரியாக செயற்படும் “ஹெல உறுமய” பிக்குகள் போன்றோர், அஹிம்சையை வலியுறுத்திய புத்தபகவானின் பெயரைக் கூறி ஆர்ப்பாட்டம், அடிதடிகளில் ஈடுபடும் பிக்குகள், போன்றோரை பற்றி அடிக்கடி அறிவதாலும் பார்ப்பதாலுமோ என்னவோ அந்த எண்ணம் இன்னும் வலுப்பெறுகிறது.

கொழும்புப் பேரூந்துகளில் முதல் இருக்கை மதகுருமார்களுக்காக ஒதுக்கப்பட்டிருப்பது வழமை.. போக்குவரத்துக்காக 98% பேரூந்துகளைத் தான் பயன்னடுத்துகிறேன், என்றாலும் அந்த இருக்கையில் பிக்குகளைத் தவிர வேறு மதகுருமார்கள் அமர்ந்து நான் பார்த்ததில்லை.(மற்றைய மதகுருமார்கள் பஸ்ஸில் பயணம் செய்வதில்லையோ?)

இப்பிடித்தான் ஒருக்கா நான் பள்ளிக்கூடத்துக்குப் பஸ்ஸில போய்க் கொண்டிருந்தேன். எல்லா இருக்கைகளும் நிரம்பியிருந்தாலும் பெரிசாக் கூட்டமில்லை. ஓரிருவர் தான் நின்று கொண்டிருந்தார்கள். அடுத்த தரிப்பில் பஸ் நிற்க பிக்கு ஒருவர் ஏறினார். “மதகுருமார்களுக்கு” என்று ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் இருந்த இரு ஆண்களில் ஒருவர் எழும்பி நின்று கொள்ள பிக்கு அமர்ந்தார்.
இரண்டு தரிப்புகளுக்குப் பிறகு பிக்கவுக்குப் பக்கத்திலிருந்த மற்றையவர் இறங்கிச் சென்றார். பிக்கவுக்குப் பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. அந்த இருக்கைக்கு பக்கத்தில் தான் நான் நின்று கொண்டிருந்தேன். கூட்டமில்லாத பஸ்ஸில் நின்று போவதையே விரும்பும் நான் யாராவது இருக்கட்டும் என்று பேசாமல் நின்றேன். யாரும் இருக்கவில்லை. காலியாக இருக்கை உள்ள போது இருக்காமல் நிற்பது சரியில்லையே.. கனத்த புத்தகப்பை வேற இருக்கச் சொல்லியது.. இருக்கவா? என்று யோசிச்சேன். பிக்குவுக்குப் பக்கத்தில இருக்கலாமோ என்று தெரியவில்லை. முதல்ல ஒருத்தர் இருந்திட்டுத் தானே எழும்பிப் போனாரெண்டு நினைச்சுப் போட்டு போய் இருந்திட்டன். பிக்கு ஒருமுறை என்னைப் பார்த்திட்டு பேசாம தன்ர பாட்டில இருந்தார். பஸ்ஸில ஒரே சலசலப்பு. எனக்கு பின்னாலிருந்த சிங்களப் பெண்மணி என்னவோ சிங்களத்தில் சொன்னார். கூர்ந்து கவனிக்காட்டா எனக்குச் சிங்களம் கொஞ்சமும் புரியாது.. வேற யாரோடையோ கதைக்கிறாவாக்கும் என்று நினைச்சிட்டுப் பேசாமல் இருந்திட்டன். அவ விடலே.. திரும்ப என்னைத் தட்டி “துவ.. அதில இருக்கக் கூடாது, எழுந்திரும்” என்று சொன்னா..

செய்யக்கூடாததை செய்திட்டேனே என்று எனக்கு என்னவோ போல ஆச்சு. டக்கெண்டு எழும்பிட்டன். முதல் இருக்கை என்றதால பஸ்ஸில் இருந்த எல்லோருமே இருந்ததையும அவ சொன்னதையும் நான் எழும்பினதையும் பார்க்கலாம். நான் தான் அவமானப்பட்டிட்டன் பரவாயில்லை என்று விட்டாலும் பாடசாலை உடையோட நின்றதால என் பாடசாலையையும் ..........................

அதற்குப் பிறகு நண்பர்கள் சொன்னார்கள், பிக்குவுக்குப் பக்கத்தில பெண்கள் யாரும் இருக்கக் கூடாதாம்.. ஆண்கள் வேணுமென்றால் இருக்கலாமாம் என்று. எனக்கெண்டா இது ஏனென்று புரியவேயில்லை. பெண்கள் பக்கத்தில் இருந்தால் அவர்கள் பிக்குகளாக இருப்பதன் புனிதம் கெட்டுப் போய் விடுமோ?

அந்த சமயத்தில், இந்தியாவில் பஸ்ஸில் ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அது தெரியாமல் நடந்து கொண்ட இலங்கையர் ஒருவர் வயது முதிர்ந்த பெண்மணி ஒருவரிடம் ஏச்சு வாங்கியதாகவும் அதை பார்த்த நண்பர் ஒருவர் சொன்னது ஞாபகத்துக்கு வந்து போனது.

11 comments:

said...

இது எனக்கு வியப்பளிக்கிறது. பேருந்தில் தனி ஆசனமா?
அதுவும் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்க்கு?
இது ஒரு அவமானம் இல்லையா அவர்கட்கு?
உங்கள் பதிவு அருமை. என் பாராட்டுக்கள்.
இங்கு சென்னையில் இதுபோல் எனது நண்பன் அருகில் ஒரு பெண் அமர்ந்து (பின்னிரவு நேரம்) பயணிக்கையில், மெதுவாக என் நண்பன் பக்கம் சாய்ந்து பணம், மோதிரம் எல்லாம் கழட்டச் சொன்னாள். மறுத்தால் தவறாக நடந்ததாகச் சொல்லிக் கத்தி அவமானப்டுத்த முடியும் என மிரட்டினாள். என் நண்பன் என்ன செய்தான் தெரியுமா? உடனே எழுந்து நின்று விட்டான் ஒரு அறை. அப்பெண் கதிகலங்கிப் போய்விட்டாள்.
எல்லோரும் உடன் கூடி விசாரித்த்தில் அவன் காப்பாற்றப்பட்டான். இப்படியும் பெண்கள்!!!. இங்கு சென்னையில்.

Anonymous said...

ஒரு மதத்தினை சேர்ந்தவர்களுக்கு என்பது தவறு.பொதுவாகவே மதகுருமார்களுக்கு என்றுதான் ஒதுக்கப்பட்டுள்ளது.அது மூவினங்களையும் சேர்ந்த மதகுருமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் அதில் அமரலாம் ஆனால் மத குருமார் வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை.

said...

புது விஷயம். தெரியப்படுத்தினதுக்கு நன்றி பாவை.

said...
This comment has been removed by a blog administrator.
said...

பாவை, உங்களின் இந்தப் பதிவை தமிழ்மணத்தில் பார்த்தவுடன் பின்னூட்டம் இட பலமுறை முயன்றும் உங்கள் ப்ளாக்கர் முதலில் இடங்கொடுக்கவில்லை. இப்போது வேலை செய்யத் தொடங்கிவிட்டது என்று நினைக்கின்றேன்.
....
கிட்டத்தட்ட உங்களை மாதிரித்தான், புத்தரைப் பற்றியும் புத்தமதம் பற்றியும் இந்தவகை பிக்குகளில் ஆரம்பித்த அறிதலே எனக்கும் ஈழத்தில் இருந்த சமயம் இருந்தது. பிறகு கொஞ்சம் வாசிக்கத்தொடங்க, புத்த'மதம்' என்பது இலங்கையில் இருப்பது மட்டுமல்ல என்பது புரிந்தது. இன்றைய பொழுதில் புத்தரும் அவரது தத்துவங்களும் என்னை வசீகரித்துக் கொண்டிருக்கின்றன என்பது வேறுவிடயம்
....
கொழும்பில் இருந்து புதிதாய் ஒரு வலைப்பதிவர் வருவது சந்தோசமாயிருக்கிறது. தொடர்ந்து உற்சாகமாய் எழுத வாழ்த்து.

said...

நன்றி Chameleon, துளசி, கரிகாலன், டிசே

Chameleon

கரிகாலன் சொன்னது போல் மூவினங்களையும் சேர்ந்த மதகுருமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றாலும் பிக்குகளைத் தவிர வேறு மதகுருமார்கள் அமர்ந்து நான் பார்த்ததில்லை. பிக்குகளை இலகுவாக இனங்காணக் கூடியதாக இருப்பது தான் காரணமோ தெரியவில்லை.
//இப்படியும் பெண்கள்!!!//
அப்படியாக என்னையும் நினைத்துத்தான் எழும்ப சொன்னார்களோ என்று தான்........


டிசே

நீண்ட காலமாக வலைப்பதிவுகளை வாசித்து வந்தாலும் இப்போது தான் ஆரம்பிக்க முடிந்தது. நன்றி உற்சாகப்படுத்தலுக்கு. உங்கள் வலைப்பதிவில் நீங்கள் குறிப்பிட்ட ஆங்கில ஆசிரியர் அருள்எம்பெருமான் நான் அறிந்தவராயிருக்க வேண்டும்.

said...

Hi Paavai, Is it possible to mail me at (dj_tamilan25@yahoo.ca), if you don't mind. Thank you.

said...

மதங்களுக்கும் பெண்களுக்கும் உள்ள உறவு ஊரறிந்தது. எந்த மதம்தான் பெண்களைச் சமமாகப் பார்க்கிறது.


சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தில் எல்லா இடங்களிலுமே ஆண்கள் பெண்களுக்கென்று தனி இருக்கை அமைப்பு உண்டு. ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரி இருக்கும். முதியவர் இருக்கை கூட இருந்ததாக ஞாபகம். ஆனால் மும்பை போன்ற வட பிரதேசங்களில் அவ்வாறு இல்லை.

சூரத்தில் share ஆட்டோ உண்டு. முன்பின் பார்த்திராத ஆண்,பெண் யாவரும் நெருக்கி அடைத்துக்கொண்டு ஒரே ஆட்டோவில் போவார்கள்.

மதகுருக்களுக்கு தனி இடம் ஒதுக்கியுள்ள ஒரே நாடு இலங்கைதான் என்று நினைக்கிறேன்.

புது தகவலுக்கு நன்றி பாவை.

said...

கல்வெட்டு

மதகுருமார்களுக்கு மட்டுமல்ல... கர்ப்பிணத் தாய்மார்களுக்கு மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு முன்னிரிமை அளிக்கும் வகையிலும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. என்ன ஒன்று.. அவர்களுக்குப் பக்கத்தில் யாரும் இருக்கலாம். எவரும் எதுவும் கேட்க மாட்டார்கள்.

said...

புதியத் தகவலை தந்தமைக்கு நன்றி...

Anonymous said...

engal matha kurumaar kalyaanam kattalaam... but Pikku kalyaanam katta mudiyaathu,.,. athanaal than neengal avarukku pakkathil irunthu kalyaana aasai eatpattu vida koodaathu endu ungalai eluppi irukiraarhal... :P